*'நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்'*
(ஏசாயா 26:7)
நீதிமான் இந்த உலகத்தில் கடந்துபோகும் பாதை கரடுமுரடானது. இவைகள் ஒன்றும் புதிதல்ல. இவைகள் தேவனால் நியமிக்கப்பட்ட வழிகள், பாதைகள். இந்த பாதையை ஒவ்வொரு அடியிலும் தேவன் நமக்காக செம்மைப்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது. உன் பாதை எவ்வளவு கரடுமுரடானதாகக் காணப்பட்டாலும், கால் இடறும் என்று சொல்வதற்கு ஏதுவானதாக இருந்தாலும் நீ ஒருபோதும் கலங்காதே, திகையாதே. உன் பாதைகளை செவ்வைப்படுத்துகிறவரை நோக்கியே உன் கண்கள் இருக்கட்டும். அநேகவேளைகளில் உன்னுடைய ஒரு அடி மாத்திரம் செவ்வைப்படுத்தப்படும். அடுத்த அடியை விசுவாசத்தோடு நீ எடுத்து வைக்கும் போது அதற்குண்டான பாதையும் கர்த்தரால் செம்மைப்படுத்தப்படுகிறது என்பதைக் காணமுடியும். ‘குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும் கோணலை செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்’ (ஏசாயா 42 : 16 ). நீங்கள் போகும்பாதை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம், இதுவரை அவ்விதமான வாழ்க்கைப்பாதையில் கடந்து செல்லாத வழியாக இருக்கலாம். ஆனாலும் சோர்ந்து போகாதிருங்கள். ஏனென்றால் தேவன் உங்களை அவ்விதமாக வழிநடத்துவார் என்பதை அறிந்து உணருங்கள். மேலும் உங்கள் பாதை வெளிச்சமற்றதாக, இருளாக இருக்கலாம். உங்களுக்கு முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறியக்கூடாத இருளாக இருக்கலாம். அடுத்தது என்ன நடக்கும் என்பதை யூகிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் நம்பிக்கையோடே முன்னேறுங்கள். அவர் இருளை வெளிச்சமாக்குவார். பாதை கோணலாக இருந்தாலும் அதைச் செவ்வையாக்குவேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிற தேவன் அவ்விதம் செய்வார் என்று நம்பு. நிச்சயமாய் தேவன் அவ்விதம் செயல்படுவதை நீ காண்பாய்.
This Devotion was shared from Tamil Christian Daily Devotion App.
Download from Playstore.
http://bit.do/dailydevotion
No comments:
Post a Comment